மகா நாளிது .








இதோ திருமணம்  ஆகி மூன்று வருடங்கள் கடந்து விட்டது .எங்கும் எதிலும் அன்பினை விதைத்துச் சென்றுகொண்டிருக்கிறது காலம் .
இல்லறத்தின் புரிதல்களில் நம் அன்பு மிகைப்படுத்தப்படுகிறது .
உனக்காகவே எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் சொற்களில் உணர்தல் அனைத்துமே உனதாகவே கொண்டிருக்கிறது . அத்தனை நிறைவையும் கொண்டிருக்கிறது யாவும் . சில ஊடல்களில் நம் நினைவினை ஆங்காங்கே தனித்திருக்கிறது வெளி . வாழ்வு இன்பத்தையும் துன்பத்தையும் அனைத்தின் பக்கமும் கொண்டிருக்கிறது . ஒரு தீராத வலியினை நம் மீது செலுத்தி விட்டு சென்று விட்டது பெருவெளி .நம் மூன்று மாத உயிர் கரு நாம் இழந்திருந்த பொழுது நம் அன்பே நம்மை மீட்டுக் கொண்டிருக்கிறது .





பிரபஞ்ச நிழலில்
உறங்கிக்கொண்டிருந்தது
தன் உணர்தலின் கனவு .

விழித்தெழும் கனவில்
பிரபஞ்ச ஒளி
தூது கொண்டு வந்திருக்கிறது .

தன் தொன்மையின் தொடர்ச்சியை
எத்தனை எத்தனை
நூற்றாண்டுகளைக் கடந்து
சென்றுக்கொண்டிருக்கிறது
இந்தப் பிரபஞ்ச நகர்தல் என்று .

நம் இருப்பின் அமைவு
பிரபஞ்சத்தின் முதல் வருகையை
உறுதிப்படுத்துகிறது .
----------------------------------------

ஆதியின் ஒளியை
வழிபட்டுக் கொண்டிருக்க
என் முதல் அன்பை
இன்னும் உருவாகியிராத
உன்னிடம்
என் மன நீர்மத்தில்
அண்டமெங்கும்
குமிழ் செய்து
கொண்டிருக்கிறது .
---------------------------------------------------------

இன்னும் உருவாகியிராத
ஓர் இருப்பில்
தன் உணர்தலை அண்டமெங்கும்
பரவச் செய்கிறாய் .

ஆதியின் ஆக்கங்களை
காலத்தின் வழியே செலுத்துகிறாய்
முதன் முறையாக
பிரபஞ்ச அன்பை
என் பெரு வெளியில்
விடுவிக்கச் செய்தாய் .

உன் மகா இயக்கம் இப்பொழுது
எதனைச் சார்ந்து
இயக்கப்படுகிறது
உன் வெற்றிட இருப்பில்
பிரதி பிரபஞ்சமாக
என்னை உருவாக்கி
கொள்கிறாய் .


உனக்கே உனக்கான
வார்த்தைகளை
வடிவமைகிறாய்.

அனைத்தும்
இறுதி செய் .

----------------------------------

உன் அகாலத்தில்
எங்கள் அருவும்
கொண்டு உயிர்த்திருந்தாய்.

உன் இருப்பின் அமைவு
இன்றியும்
உணர்ந்து கொண்டிருக்கிறோம்
கரு இழந்த
பிரபஞ்சத்தில் .

விண்ணகி
விண்ணகன்
என்று முடிவிலியாய்
ஓலமிடுகிறது
நம் மனம் .

நம் கண்ணீரை
ஏந்தி கொள்ள
காலம்
போதாது தான் .

இதனை மீறியும்
ஏற்றுக்கொள்ள
எங்களிடம்
ஏதுமில்லை .

கைவிடப்பட்ட உயிர் கரு
அகாலம் கொண்டு
நம்மை உயிர் கொண்டிருக்கிறது .

நம் பிரபஞ்ச அகாலத்தில்
உன் அருவம்
அதன் அன்பும், நினைவும்
முடிவிலியாய்
என்னென்றும் நிலைத்திருக்கும் .

நம் இழப்பின் வழியே
உயிர்த்தெழும் காலம் .

சென்று வா
விண்ணகி /விண்ணகன்
உன் மரணத்தில்
மீண்டும்
பிரபஞ்ச கரு உயிர்தெழும் .
--------------------------------------------------------

முற்றும் உன் நிகழ்வு
தொன்மையின் இயல்பாய்
தொடங்கியது .

முன் நிகழ்ந்த யாவும்
எவ்வித மாறுதலும் இன்றி
இந்தப் பிரபஞ்சத்தைத் தொடர்கிறது .

உயிர் கொண்டிருந்த மூன்று மாத கரு
எப்பொழுதும் மரணம் எய்துவதில்லை
இல்லாமையின் இருப்பில்
உன் நினைவின் அகாலம்
அமரத்துவம் அடைந்த ஒன்று .

விண்ணகி என
மன ஒலி எங்கும்
ஓலமிட்டுக் கொண்டிருக்கிறது
விண்ணகி இயற்கை
தன் நுண்ணியப் பகிர்தலை
அதன் காலத்தில்
ரசித்துக் கொண்டிருக்கிறது .
நீ வாழ்க விண்ணகி .

விண்ணகி
உன் தொன்மையின்
சிறு நிழலில்
உறங்கி கொண்டிருக்கிறேன்
ஒளியை இன்னும்
நிரப்பிக் கொண்டிரு
கரைந்து கொண்டிருக்கும் தன் சுயத்தில்
நீயே நிறைந்து கொண்டிருக்கிறாய்
விண்ணகி நீ என் பிரிதொரு பிரபஞ்சம் .


விண்ணகி
என் மவுன அமைவில்
இயங்கி கொண்டிருக்கும்
உன்னிடம் எதுவுமே
கேட்கபோவதில்லை
நம் உணர்தலின் இறுதி
அடைந்து விட்ட ஒன்று .

விண்ணகி
தன்னை மட்டுமே
யாசித்துக் கொண்டிருப்பவனிடம்
எதுவுமே எஞ்சி இருப்பதில்லை
நீ மட்டுமே சுய உணர்தலாய்
வந்தடைந்தாய் .

உன் இருப்பின் அமைவில்
எனக்காகக் காத்திரு
விண்ணகி
நம் காலம்
முடிவிலியால் ஆனது .
----------------------------------------------------


அனைத்தையும் மீண்டு அன்பின் வழியே முன்னிறுத்துகிறது பெருவெளி .

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

விடைபெறுதல்-உயிரோசை