எல்லாமுமான என் சரோஜாம்மா
விடியலின் தேடும் ஒளியாய்
நாளும் வழிகாட்டும் உந்தன்
நேசமும் கவனிப்பும் கனிந்து
உள்ளமெங்கும் நிறைகிறாய்.
இறுதி நாட்களின் விடிய விடிய பேச்சும்
உன் மடியில் உறங்கி கொண்டே
பேசியவை என் இரவெங்கும் ஒலிக்கிறது ..
மாற்றிய வாழ்வை உனதாக்கி கொண்டாய்
உன் உறவின் கணத்தலில் மனமும் நீர்மமாகிறது
இன்று வரை என்னை புரிந்து கொண்டவை
அனைத்தும் உன்னுள்ளே உறங்கி கொண்டிருக்கிறது
யாருமே இனி அதை அறியப்போவதில்லை .
என் எல்லாவற்றிலும் பகிர்வு உன்னுடனே
இப்பொழுது கேட்பதற்கு யாரும் இல்லாததால்
பகிர்வதற்கு நிறைய இருக்கிறது
தவிக்க விட்டு போன உன்னை
துயரத்தை கண்ணிர் விட்டு போக்குகிறேன்.
சொல்லிய விதம் நிரூபணம் செய்தாய்
மரணத்தை ஏந்தி கொண்டு .
இறப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு
முன்னால் கூட பேசியதை
என் உயிரில் கலக்க வைத்தாய்.
சென்ற வாரத்தில் உனக்கு
வருட சடங்கு நடத்தினோம்
நீ அறிந்தாயோ இல்லையோ
அனைவரும் ஒன்று கூடினோம் அக்கணத்தில்
நீ கூற நினைத்ததை நம் குடும்ப உறவுகள்
யாரேனும் அறிந்திருக்க கூடுமா ..
உன் பிள்ளைகள் பேரன் பேத்திகள்
மருமகள்கள் உன் தோழிகள்
உறவினர்கள் அன்றைய நாளின்
கடமையை சரி செய்தோம் அவ்வளவே .
உன் பிரிவு நெஞ்சத்தின் கூரிய வடுவாக
நிலைத்து நின்று விட்டதை உன்னை
தவிர யாரும் அறிந்திட முடியாது .
மீண்டும் உன் மறு பிறப்பு நம் வீட்டில்
என் அன்பை உயிர்பிக்க வைக்கிறாய்
தொலைந்து போன நேசங்களை
அதற்காகவே சேகரித்து வைத்திருக்கிறேன்
உனக்கு பூ சூட்ட.
மொத்தத்தில் ஒரு ஆண்டுகள்
சென்றதை நம் பெருங்கனவு
உணர்த்தி கொண்டிருக்கிறது .
-உன் தி .ராஜேஷ்
Comments
Post a Comment